இந்த மூன்றெழுத்து மந்திரம் வார்த்தையல்ல, வாழ்க்கை! இது பற்றி ஒரு கோடி blogs வந்தாலும் மேலும் ஒன்று முளைக்கத்தான் செய்யும்!.இதன் வசம் விழுபவர்கள், வாசம் மறப்பார்கள், சுவாசம் இழப்பார்கள்.இது உணர்வல்ல, உன்னதம். காதலில் ஜெயித்தவன் அதிர்ஷ்டசாலி. தோற்றவனோ பாக்யசாலி.ஜெயித்தவனின் காதல் ஒருவளிடத்தில் உருகி நிற்கும். தோற்றவனின் காதலோ கடலென விரியும். அனைத்து உயிர்களையும் அணைக்கும்.அவன் காதலை கொண்டே கண்களை திறப்பான்.அனைவரையும், அனைத்தையும் காதலிப்பான்.ஆகையால், காதலியுங்கள்.. காதலித்து தோற்று போங்கள்!
இல்லை. காதலில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. அது இடம் மாறும். வேரோடு பிடுங்கப்பட்ட நாற்று வேறிடத்தில் வளருவது போல காதலும் தடம் மாறினாலும் தழைத்து நிற்கும். செழித்து வளரும். இது புரிவது கடினம். புரிய முடியாது. அறிய வேண்டும். காதல் ஒரு முறை தான் வரும் என சொல்பவர்கள் மூடர்கள்.காதல் இழந்த இதயம், அன்பிற்கு ஏங்கும் ஒரு phoenix பறவை. எத்தனை முறை இறந்தாலும், எழுந்து பறக்கும், அன்பைத்தேடி!
காதல், பசுத்தோல் போர்த்திய காமப்புலி என சிலர் பேசுகின்றனர். இல்லை நண்பர்களே, இல்லை. காமத்தினூடே ஊர்ந்து, வலம் வந்து காமத்தையே விழுங்கிய மலைப்பாம்பு காதல்! அதற்காக காதல் காமம் கடந்தது என பொய் உரைக்க விரும்பவில்லை நான். எனது குருநாதர் பாலகுமாரன் அவர்கள் சொல்வது போல காதல் சமையல் எனில், காமம் மாமிசம். எது உண்ணத்தகுந்தது? சமைத்த மாமிசமா, பச்சை மாமிசமா? புரிந்துகொள்ளுங்கள்.
காதல், பெண்ணை புரிந்துகொள்ள, பெண்மை அறிந்துகொள்ள, ஒரு உன்னத ஊடகம். இங்கு பெண்மை புரிதல் அவசியம். ஏனெனில் பெண், மனிதத்தின் மையப்பகுதி. பெண் தெய்வீகமானவள். காதல் உணர்ந்தவன் பெண்ணை மதிப்பான். பெண்ணை மதிக்கும் சமூகம் உயர்ந்து நிற்கும். தன்னை மதிப்பவனை தலையில் வைத்து ஆடுவாள் பெண். ஆண் பெண்ணை மதிக்க, பெண் ஆணை வியக்க, வாழ்க்கை சிறந்து நிற்கும்.
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே !

No comments:
Post a Comment